உலக கோப்பை வென்றும் ஷிவம் துபேவிக்கு இப்படி ஒரு சிக்கல் ஏற்பட்டதா? பொய் சொல்லி சமாளித்த மனைவி..
உலகக் கோப்பை டி20
உலகக் கோப்பை டி20 தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது. இறுதி போட்டியில் இந்தியா - நியூஸிலாந்து அணிகள் அகமதாபாத்தின் நரேந்திர மோடி விளையாட்டு அரங்கில் மோதியது. முதலில் பேட் செய்த இந்திய அணி 255 ரன்கள் அடித்து நொறுக்கியது.
இதனையடுத்து ஆடிய நியூஸிலாந்து அணி வீரர்கள் ஆரம்பத்தில் விறுவிறுப்பாக ஆடினாலும் 159 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் கொடுத்து தோல்வியடைந்தது. 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிப்பெற்று உலக கோப்பை டி20 கோப்பையை 3வது முறையாக கைப்பற்றி சாதனை படைத்தது.

வெற்றிப்பெற்ற இந்திய அணிக்கு உலகக்கோப்பைக்கான பரிசு தொகை 21.5 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது. மேலும் பிசிசிஐ சார்பில் ரூ.131 கோடியும், ஐசிசி சார்பில் ரூ.25 கோடியும் பரிசாக கொடுத்துள்ளது.
ஷிவம் துபே
இந்நிலையில், கோப்பையை வென்று இந்திய அணி வீரர்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ள நிலையில், ஷிவம் துபேவிற்கு சொந்த ஊருக்கு செல்ல பெரிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. குடும்பத்துடன் சிவம் துபே அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு செல்ல திட்டமிட்டபோது, விமானம் கிடைக்காமல் போயுள்ளது.

சாலை வழியாக சென்றால் தாமதம் ஏற்படும் என்பதற்காக, ரயிலில் செல்ல திட்டமிட்டுள்ளார். ஆனால் ஷிவம் துபேவிற்கு 3ஆம் வகுப்பு ஏசி ரயில் டிக்கெட் மட்டுமே கிடைத்துள்ளது.
யாராவது ரயில் நிலையத்தில் பார்த்தால், கூட்ட நெரிசல் ஏற்படும் என்பதற்காக, ரயில் வருவதற்கு சில நிமிடம் வரை காரிலேயே காத்திருந்தார். மேலும் யாருக்கும் அடையாளம் தெரியாமல் இருக்க, முழுக்கை டிசர்ட், முகக்கவசம், கேப் என்று பயணித்துள்ளார்.

அப்போது டிக்கெட் பரிசோதகர் வந்தபோது அடையாள அட்டையை பரிசோதித்த போது ஷிவம் துபே என்றால், கிரிக்கெட் வீரரா என்று கேட்டுள்ளார். அதற்கு ஷிவம் துவேவின் மனைவி அவரா, அவர் ஏன் இங்கு வரப்போகிறார் என்று சமாளித்துள்ளார். இந்த விஷயம் தற்போது இந்தியா முழுவதும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.