நான் ராஜசேகரன் மனைவிதான்..ஆனா மேரேஜ் சர்டிஃபிகேட்!! மனைவி தாரா வேதனை...
ராஜசேகரன்
ஒளிப்பதிவாளரும் நடிகருமான ராஜசேகரன் கோவிட் காலத்தில் மரணமடைந்தார். இறக்கும்போது சென்னை வடபழனியில் வங்கியில் கடன் வாங்கி வீடு ஒன்றை வாங்கியிருக்கிறார். திடீரென ராஜசேகரன் இறந்தநிலையில்ம் அவரது மனைவி தாராவால் கடனை திருப்பிச்செலுத்த முடியாமல் போக, வீட்டை வங்கி ஏலம் விட்டுவிட்டது.
இதனையடுத்து தனக்கு குடியிருக்க வீட்டு வசதி வாரியத்தின் மூலம் ஒரு வீடு ஒதுக்கித் தரவேண்டி முதல்வர் அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்று மனு அளித்து வந்தார். இதனையடுத்து தமிழக அரசின் திரைக்கலைஞர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டபோது ராஜசேகரனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டது.

மனைவி தாரா வேதனை
விருதுவிழாவில் விருதை வழங்கிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம், தன் நிலைமையை கூறியிருக்கிறார் தாரா. பின் உதயநிதியும் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பின் எதுவும் நடக்கவில்லையாம். அதற்கான காரணம் என்ன என்று கேட்டதற்கு, ராஜசேகரன் - தாரா திருமணம் மிகவும் தாமதமாக நடந்திருக்கிறது. தாராவை அவர் திருமணம் செய்து கொண்டதுகூட திரையுலகினர் பலருக்கும் தெரியவில்லை.

முதல்வர் அலுவலகத்தில் இருந்து அவரது மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது நிஜம் தான். ஆனால் அவர் ராஜசேகரின் சட்டப்பூர்வ மனைவிதானா என்பது குறித்த தெளிவான பதில் கிடைக்கவில்லை என்பதால் அவரது கோரிக்கை மனு எவ்வித நடவடிக்கையும் இல்லாமல் இருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து தாரா, நாங்கள் கல்யாணம் செய்துகிட்டதுமே அதை பதிவு செய்திடலாம்னு அவர்தான் சொன்னார்.
அவருடைய குடும்பத்துக்காரர்களால் எனக்கு வரும்காலத்தில் ஏதாவது பிரச்சனைகள் வரலாம் என்று பதிவு செய்யணும்னு சொன்னார். அதனால் பதிவு செய்து சர்ட்டிபிகேட்டும் வாங்கி வைத்திருந்தேன். வங்கி வீட்டை ஜப்தி பண்ணினபோது என்னுடைய பொருட்கள் சிலவற்றை தூக்கிட்டு போனப்ப சில டாகுமெண்ட்டுகளையும் தூக்கிட்டு போயிட்டாங்க.
வங்கி நடவடிக்கைக்கு சம்மதம்னு கையெழுத்து போட்டுக் கொடுத்துட்டு எல்லாத்தையும் வாங்கிக்கோங்கனு சொன்னாங்க. இப்பவும்கூட வீடு திரும்பவும் எனக்கு கிடைச்சிடாதான்னு ஒரு நப்பாசையில் நான் கையெழுத்துப் போட வரமாட்டேன்னு இருக்கேன். முதலமைச்சர் அலுவலகத்தில் கடைசியில் ஒண்ணும் நடக்கல, அப்பத்தான் நீங்க அவருக்கு சட்டப்பூர்வ மனைவியாங்கிற சந்தேகம் வந்துதான் உங்க மனு கிடப்பில் கிடக்குன்னு எனக்கும் சொன்னாங்க. விசாரிக்க வந்தவங்க என்னை கேட்டிருக்கலாமே, நானே சர்டிஃபிகேட் காட்டியிருப்பேன். அதைவிட்டுட்டு யார்கிட்ட கேட்டாங்களோ தெரியல.

மேரேஜ் சர்டிஃபிகேட்
ஊரெல்லாம் போய் ராஜசேகர் பொண்டாட்டி நான் தான்னு நோட்டிசா அடிச்சு ஒட்ட முடியும். ஒருவழியா அவருடைய அதிகாரப்பூர்வ மனைவி நான் தான் அதிகாரிகளுக்கு புரிய வைக்கிறதுக்குள்ளேயே தேர்தல் வந்திடுச்சு. இனி எந்த விஷயத்துல எந்த நடவடிக்கையும் எடுப்பாங்களோன்னு தெரியல. இருந்தாலும் சான்றிதல் கையில் வச்சுக்கலாம்னு பதிவு செய்த அலுவலகத்தில் போய் நகல் கேட்டேன்.
எடுத்துத்தர்றோம்னு சொன்னவங்க 10 நாள் கழிச்சு கூப்பிட்டு, நீங்க கேட்ட திருமண பதிவு சான்றிதழ் நகல் அடங்கிய கோப்புகள் மிக்ஜாம் புயலில் சிதிலடைந்ததால் சான்றிட்ட நகல் வழங்க முடியாத நிலைவுள்ளது என்று எழுதிக்கொடுத்துட்டாங்க. சான்றிதழ் இல்லனு சொல்லாம சேதமாகிடுச்சுன்னு சொன்னவரைக்கும் ஆறுதல் அடைஞ்சபடி வந்தேன். இனி புது அரசாங்கம் வந்த பிறகாச்சும் என் கோரிக்கை நிறைவேறுமான்னு தெரியல என்று உருக்கமாக பேசியிருக்கிறார் ராஜசேகரன் மனைவி தாரா.