நில ஆக்கிரமிப்பு வழக்கில் சிக்கிய காதலர் தினம் பட நடிகை சோனாலி பிந்த்ரே..
காதல் சம்பந்தப்பட்ட படங்களில் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்ட ஒரு படம் என்றால் காதலர் தினம். கடந்த 1999ம் ஆண்டு வெளியான இந்த படத்தை கதிர் இயக்க ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.
தில் குணால் கதாநாயகனாக நடிக்க சோனாலி பிந்த்ரே கதாநாயகியாகவும் நடித்திருந்தவர். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சோனாலி வெளிநாடு சென்று கடுமையான சிகிச்சைக்கு பின் மீண்டு வந்தார். தற்போது ஆக்டீவாக படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.
நில ஆக்கிரமிப்பு
இந்நிலையில், சோனாலியின் கணவர் கோல்டி பெல் மீது புனேவை சேர்ந்த விவசாயி சந்திரகாந்த் பாலு ஷிண்டே, அவரது தாய் கமல்பாய் ஆகியோர் நில அபகரிப்பு வழக்கு தொடர்ந்துள்ளனர். அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில், புனே மாவட்டம் மாவல் தாலுகா உக்சன் கிராமத்தில் எங்களது கட்டுப்பாட்டில் 32 ஆயிரம் சதுர அடி குத்தகை நிலமுள்ளது.
அந்நிலத்தை எங்களுக்கு தெரியாமல் உரிமையாளர் விற்பனை செய்துவிட்டார். அந்த நிலத்தின் ஒரு பகுதியை 2021ல் நடிகை சோனாலி பிந்த்ரேவின் கணவர் கோல்டி பெல் வாங்கியுள்ளார். அந்த நிலத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கட்டுமான பணிகளை மேற்கொள்ள முயற்சி செய்தனர். அதை தடுத்தபோது எங்களுக்கு மிரட்டல் விடுத்தனர். உள்ளூர் போலிசார் எங்கள் மீது திருட்டு வழக்குப்பதிவு செய்ய இருப்பதாக மிரட்டுகிறார்கள்.
நடிகை சோனாலி பிந்த்ரே, அவரது கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீதான விசாரணை வரும் 24 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தங்களிடம் பணம் பறிமுதல் நோக்கத்துடன் பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக நடிகை சோனாலி பிந்த்ரே, கோல்டிபெல் கூறியுள்ளனர்.