6 நாட்களுக்கு பின் சடலமாக மீட்கப்பட்ட 29 வயது பாடகி!! கனடாவுக்கு எஸ்கேப் ஆன காதலன்...
இந்தர் கவுர்
காணாமல் போன இளம் வயது பாடகி 6 நாட்களுக்கு பின்பு கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து இளம்பெண்ணை துப்பாக்கி முனையில் கடத்தி கொலை செய்த முன்னாள் காதலனுக்கு வலைவீச்சு. பஞ்சாப் மாநிலம் லூதியானா அருகே கூபா என்ற கிராமத்தை சேர்ந்தவர் தான் இந்தர் கவுர்.

29 வயதான பஞ்சாப் பாடகர் என்பதால் நாடு கடந்தும் பலரால் அறியப்பட்டு வந்தவர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருந்து வந்தார். தன்னுடைய பாடல்கள், பயணங்கள் தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்களை பதிவிட்டு வந்தார் இந்தர். கனடாவில் வசித்து வரும் சுக்விந்தர் சிங் என்கிற சுகா, இன்ஸ்டா மூலம் பாடகிக்கு அறிமுகமாகியுள்ளார். எல்லைகள் கடந்து இருவரின் உரையாடலும் தொடர்ந்து நட்பாக, ஒரு கட்டத்தில் காதலாக மாறியிருக்கிறது.
நீலோ கால்வாயில் சடலமாக
இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு தன்னுடைய காரில் மளிகை கடைக்கு இந்தர் கவுர் சென்றுள்ளார். நள்ளிரவாகியும் அவர் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் அவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது ஸ்விட்ச் ஆஃப் ஆகியுள்ளது.

மறுநாள் காலையில் இந்தர் கவுர் காணவில்லை என்று குடும்பத்தினர் போலிசில் புகாரளித்துள்ளனர். காணாமல் போய் 6 நாட்களுக்கு பின் கூபா கிராமத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள நீலோ கால்வாயில் அழுகிய நிலையில் இந்தர் கவுர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அதன் அருகே ரத்தக் கறையுடன் நின்றிருந்த பாடகியின் காரும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்து போலிசாரி விசாரணை செய்து வந்த நிலையில் பல திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது.
திட்டம்தீட்டிய காதலன்
பாடகி இந்தர் கவுர், 7 ஆண்டுகளாக சுக்விந்தர் சிங்கை காதலித்துள்ளார். சுக்விந்தரின் குடும்பத்தினர் பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டத்தில் வசித்து வருகிறார்கள். ஆனால் அவர் கனடாவில் தங்கி கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்ததும் பெண் வீட்டார் சுக்விந்தர் சிங் குறித்து விசாரித்துள்ளனர். அதில், அவருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதை அறிந்து பாடகி அதிர்ச்சியாகி இருக்கிறார். இதனால் 7 ஆண்டு காதலை பிரேக்-அப் செய்துள்ளார் இந்தர் கவுர். இதன்பின் லவ் டார்ச்சர் கொடுத்த சுக்விந்தர், இந்தர் கவுரை திருமணம் செய்ய வற்புறுத்தியுள்ளார். பாடகி அதற்கு திட்டவட்டமாக மறுத்ததால் அவரை தீர்த்துக்கட்ட சதித்திட்டம் போட்டுள்ளார்.
அதன்பின் கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி கனடாவிலிருந்து விமானம் மூலம் நேபாளம் தலைநகர் காதமாண்டுவுக்கு வந்த சுக்விந்தர், பஞ்சாப் வந்ததும் தன்னுடைய நண்பருடன் சேர்ந்து இந்தர் கவுரை கொலை செய்ய நாள் குறித்துள்ளார்.

திட்டமிட்டபடி கடந்த 13 ஆம் தேதி காரில் கடைக்கு சென்ற பாடகியை துப்பாக்கி முனையில் சுக்விந்தர் சிங் கடத்தி, பின் அவரை காருக்குள்ளேயே கொலை செய்துவிட்டு உடலை கால்வாயில் வீசியுள்ளார். அன்று இரவே நேபாளம் சென்று அங்கிருந்து கனடாவிற்கு தப்பியோடியது விசாரணையில் தெரியவந்துள்ளது. சொந்த ஊரில் உள்ள சுக்விந்தர் சிங்கின் தந்தை பிரிதம் சிங், அவரது நண்பர் கரம்ஜித் சிங்கை போலிசார் கைது செய்தனர். தொடர்ந்து கனடாவிற்கு தப்பியோடிய சுக்விந்தர் சிங்கை கைது செய்து இந்தியா அழைத்து வர தூதரக ரீதியில் பஞ்சாப் போலிசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.