ஓசி ஏசி பயணம்...ஓடும் ரயிலில் காவலரை ரேசர் பிளேடால் தாக்கிய நடிகை அந்தரா..
அந்தரா பானர்ஜி
பிரபல நடிகையும் மாடலுமான 31 வயதான அந்தரா பானர்ஜி, மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர். மும்பையில் குடிபெயர்ந்து சீரியலிலும், படங்களிலும், விளம்பரங்களிலும் நடித்து வந்தவர், 2014ல் பாலிவுட் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். அப்படி பல படங்களில் நடித்து பிஸியான அந்தரா, ஓடும் ரயிலில் ராட்சசியாக மாறி ரயில்வே பெண் காவலரை பிளேடால் தாக்கி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். மும்பையிலிருந்து சூரத் நோக்கி ஆகஸ்ட் 12 ஆம் தேதி ஷூட்டிங் ஒன்றில் கலந்து கொள்ள சென்றுள்ளார்.

ஆரவல்லி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றவர், ஸ்லீப்பர் வகுப்பு டிக்கெட் மட்டுமே வைத்திருக்கிறார். ஆனால் அவர் ஏசி பெட்டியில் ஏறி அங்குள்ள ஒரு இருக்கையில் சொகுசாக உட்கார்ந்துள்ளார். அப்போது ஏசி இருக்கைக்குரிய பயணி தனக்கான சீட்டை விடச்சொல்லி கேட்டுள்ளார். அந்த இடத்தைவிட்டு நகர மறுத்து அப்பயணியுடன் தகறாரில் அந்தரா பானர்ஜி ஈடுபட்டுள்ளார். இதனால் அப்பயணி டிக்கெட் பரிசோதகரிடம் கூற, அவரிடமும் நடிகை தெனாவட்டாக நடந்துள்ளார்.
ஓசி ஏசி பயணம்
இதனால் ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், உதவி ஆய்வாளர் யாமினி காந்த், காவலர் ராஜேஷ்குமார் இருவரும் நடிகையிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவரை அவருடைய கம்பார்ட்மெண்ட்க்கு செல்ல அறிவுறுத்தியும், தான் ஏசி பெட்டியில் மட்டுமே பயணிப்பேன் என்று அடம்பிடித்துள்ளார். உடனே ஆவேசமான நடிகை, ரயில்வே பாதுகாப்பு படையினரை தகாத வார்த்தைகளால் திட்டி ரகளை செய்துள்ளார்.

திடீரென தன்னுடைய ஆடைகளை கழற்றி எறிந்தவர், தான் மறைத்து வைத்திருந்த ரேசர் பிளேடை எடுத்து ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்களை நோக்கி தாக்க, அதில் உதவி ஆய்வாளர் யாமினி காந்த் கையில் காயம் ஏற்பட்டது. பின் தன்னைத்தானே பிளேடால் அறுத்துக்கொண்டு தற்கொலை செய்வதாக கூறி நடிகை மிரட்டியுள்ளார்.
நிலைமை மோசமாக அதிகாரிகள், ஏசி பெட்டியின் கதவுகளை பூட்டினர். அப்போது நடிகை அந்தரா, ரயிலின் கண்ணாடிக் கதவு வழியாக தப்பியோட முயன்றுள்ளார். நள்ளிரவில் நடிகையின் இந்த திடீர் செயல் ஏசி பெட்டி பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ஒரு மணிநேரத்திற்கு பின்பும் நீடித்த பரபரப்பு, அடுத்து வந்த தஹானு ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது. அங்கு ஏற்கனவே தயாராக இருந்த பெண் போலிசார், ரயிலுக்குள் அதிரடியாக புகுந்து நடிகையை கைது செய்து விசாரணைக்கு பின் அந்தரா மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜாமீனில் விடுவித்துள்ளனர்.