அப்பா சொன்ன அட்வைஸ்!! 8.15 லட்சம் கோடிக்கு அதிபதியான முகேஷ் அம்பானியின் கனவு..
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான முகேஷ் அம்பானியின் தந்தை திருபாய் அம்பானி,1999ஆம் ஆண்டு ஜாம்நகரில் உலகின் மிகப்பெரிய பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையத்தை ஆரம்பித்து மிகப்பெரிய சாதனையை படைத்தார். இதுமட்டுமின்றி, அஞ்சல் அட்டையை விட மலிவான தொலைபேசி அழைப்பை செய்தால், நீங்கள் மில்லியன் கணக்கான இந்தியர்களின் வாழ்க்கையில் புரட்சியை ஏற்படுத்துவீர்கள் என்று திருபாய் தெரிவித்தார்.
தந்தையின் கனவு
தன்னுடைய தந்தையின் கனவை திருபாய் மகன் முகேஷ் அம்பானி அதை நனவாக்கினார். அவரது ரிலையன்ஸ் ஜியோ ஒரு தொலைபேசி அழைப்பை முற்றிலும் இலவசமாக்கியது மட்டுமில்லாமல், அது திரும்பப்பெறக்கூடிய வைப்பு கட்டணத்தில் இலவசமாக வந்ததால், அஞ்சல் அட்டையைவிட கைபேசியையும் மலிவானதாக்கியது. 2016ல் ரிலையன்ஸ் ஜியோ அறிமுகப்படுத்தப்பட்டு, இந்தியா முழுவதும் 4ஜி, 5ஜி இணைப்பை கொண்டு வந்தது. கிட்டத்தட்ட 500 மில்லியன் சந்தாதாரர்களை கொண்ட நாட்டின் முன்னணி டிஜிட்டல் சேவை நிறுவனமாக மாற்றினார் முகேஷ்.
"ஒரு தொழில் துவங்கி பில்லியனராக விரும்பினால், அது முடியாது. ஆனால் நீங்கள் ஒரு பில்லியன் மக்களின் வாழ்க்கையை மாற்ற விரும்பினால் வெற்றிபெற வாய்ப்புள்ளது, உண்மையான சக்தி என்றால் மக்களின் வாழ்க்கை தரத்தில் மாற்றம் கொண்டுவருவது தான். இதுதான் ஜியோ உருவாக்கப்பட்ட முக்கிய காரணம்" என்று முகேஷ் அம்பானி பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார்.
டிஜிட்டல் தொழில்நுட்பம், ரீட்டெயில்
1970ல் ரிலையன்ஸின் கனவு என்னவென்றால், இந்திய மக்களுக்கு வண்ணமயமான, நீடித்த மற்றும் பாலியஸ்டர் துணிகளை வழங்குவதாகும். 1980ல் அற்புதப்பொருட்கள் என கருப்பட்ட பாலியஸ்டர், பாலிமர், பெட்ரோ கெமிக்கல்களில் அதிகம் தன்னாட்சி கொண்ட இந்தியாவாக மாற்ற வேண்டும் என்ற கனவும் இருந்திருக்கிறது.
அதேபோல் 1990ல் இந்தியா வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் எரிசக்தியிலிருந்து விடுபட வேண்டும் என்ற எண்ணத்தோடு, 21ஆம் நூற்றாண்டின் முதல் பத்து ஆண்டுகளில் ரிலையன்ஸ் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்த கடல் ஆழங்களில் ஹைட்ரோகார்பன் ஆய்வுகளை செய்தது. டிஜிட்டல் தொழில்நுட்பம், ரீட்டெயில் வணிக வலைப்பின்னல் என இரு விசயத்தை மேம்படுத்த வேண்டும் என்ற கனவை முகேஷ் அம்பானி தற்போது நிறைவேற்றி வருகிறார்.
8.15 லட்சம் கோடி ரூபாய்
இந்தியாவின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான தேவைகள் என்ன, அவற்றை பெரிய அளவில் நீண்ட காலத்துக்கு எப்படி பூர்த்தி செய்யலாம்? என்ற கருத்தை கொண்டு பாலியஸ்டர் தொழிற்சாலை மற்றும் 4ஜி போன்ற முன்னோடி முயற்சிகளை எடுத்து வைத்து தற்போது புதிய எரிசக்தி வணிகத்தில் உலகின் மிகப்பெரிய சுற்றுச்சூழல் சுத்தமான மற்றும் பசுமை எரிசக்தி உற்பத்தி அமைப்பை உருவாக்கி வருகிறது ரிலையன்ஸ் நிறுவனம் என்று சமீபத்திய பேட்டியில் முகேஷ் அம்பானி நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார். தற்போது உலகின் டாப் பணக்காரர் லிஸ்ட்டில் 18வது இடத்தில் இருக்கிறார் முகேஷ் அம்பானி, அவரது சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 8.15 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாம்.