ஐபிஎல் விதிமீறல்: RR மேலாளர் செய்த செயல்..எட்டிப்பார்த்த வைபவ் சூர்யவன்ஷி..
ராஜஸ்தான் ராயல்ஸ்
2026 ஐபில் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சிறப்பாக விளையாடி ஆடிய 4 போட்டிகளிலும் வெற்றிப்பெற்று பட்டியலில் முதல் இடத்தில் நீடித்து வருகிறது. அப்படி முதலிடத்தில் நீடித்து வந்தாலும் தற்போது விதிமீறலில் சிக்கி புதிய சர்ச்சையில் மாட்டியுள்ளது ராஜ்ஸ்தான் ராயல்ஸ் அணி.
அதாவது கவுகாத்தியில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியின்போது இந்த விதிமீறல் நடந்துள்ளது. ராஜஸ்தான் அணி இலக்கை துரத்தி விளையாடிக் கொண்டிருந்தபோது 11வது ஓவரில் கேமராக்கள் ராஜஸ்தான் அணி வீரர்கள் அறையை படம் பிடித்தது.

ரோமி பிந்தர்
அப்போது மேலாளர் ரோமி பிந்தர், தனது கையில் மொபைல் போனை பயன்படுத்தி இருக்கிறார். அவருக்கு அருகில் அமர்ந்திருந்த வைபவ் சூர்யவன்ஷியும் அந்த மொபைலை எட்டிப்பார்ப்பது போல் கேமராவில் பதிவாகியுள்ளது.
ஐபிஎல்லில், வீரர்கள் மற்றும் போட்டி அதிகாரிகளுக்கு தங்கும் பகுதியில் கடுமையாக விதிகள் இருக்கும். அதன்படி போட்டி நடைபெறும் போது வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவி ஊழியர்கள் யாரும் மொபைல் போன் பயன்படுத்த அனுமதி கிடையாது.
மைதானத்திற்குள் நுழையும்போதே அவர்கள் தங்களின் மின்னணு சாதனங்களை அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.

ஐபிஎல் விதிமீறல்
இருந்தாலும் அணியின் மேலாளருக்கு மட்டும் சில விலக்குகள் இருக்கிறது. அவர் தனது மொபைல் போனை டிரெஸ்ஸிங் ரூமில், அதுவும் வீரர்கள் உடை மாற்றும் அறையில் மட்டும் பயன்படுத்த அனுமதியுண்டு.
ஆனால் எக்காரணமும் இல்லாமல் மைதானத்தின் எல்லையை ஒட்டிய டக் அவுட்(வீரர்கள் அமரும் பகுதி) பகுதியில் மொபைல் போனை பயன்படுத்தக்கூடாது என்பது விதிமுறை. ஆனால் ரோமி பிந்தரின் இந்த செயல் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
விதிமீறலால் ஐபிஎல் போட்டி நடுவர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் இணைந்த ஊழல் தடுப்பு, பாதுகாப்பு பிரிவு விசாரணை நடத்தும். இந்த விதிமீறல் உறுதி செய்யபப்ட்டால், சம்பந்தப்பட்ட மேலாளருக்கு அபராதமோ அல்லது சில போட்டிகளில் பங்கேற்க தடையோ விதிக்கப்படவும் வாய்ப்புள்ளதாம்.