விஷம் குடித்து உயிருக்கு போராடும் திவ்யா... கிருஷ்ண ஜெயந்தி விழாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! - திருமாங்கல்யம் இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் திருமாங்கல்யம். கடந்த சண்டே ஸ்பெஷல் எபிசோடில் கிருஷ்ண ஜெயந்தி நாடகம் நடைபெற்று முடிந்த நிலையில், ராதையாக நடித்த திவ்யா திடீரென வாயில் ரத்தம் வடிந்தபடி "நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது" என்று கூறி சரிந்து விழுந்தார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.
திவ்யாவின் வாயிலிருந்து உண்மையாகவே ரத்தம் வருவதை பார்த்து அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அப்போது பிளாஷ்பேக்கில், கவிதா பானத்தில் விஷம் கலந்தது தெரியவருகிறது. திவ்யாவின் நிலைமை மோசமடைந்ததால், உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதிக்கின்றனர்.

மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர், திவ்யா எந்த வகையான விஷத்தை குடித்திருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டால்தான் சரியான சிகிச்சை அளிக்க முடியும் என்று கூறுகிறார். விஷம் இருந்த பாட்டில் கிடைத்தால் மட்டுமே அதற்கேற்ற சிகிச்சையை விரைவாக தொடங்க முடியும் எனவும் தெரிவிக்கிறார்.
இதற்கிடையில், நடந்த அனைத்திற்கும் மகாதான் காரணம் என்று நம்பும் காஞ்சனா, மகா மீது கடும் கோபம் கொள்கிறாள். அவரை அனைவரின் முன்னிலையிலும் திட்டி மருத்துவமனையை விட்டு வெளியே தள்ளுகிறாள். இதனால் மனமுடைந்த மகா அங்கே நிற்கிறாள்.
அப்போது காவேரி மற்றும் மயில், விஷம் கலந்த பாட்டிலை கண்டுபிடிக்க வீட்டிற்கு சென்று தேடலாம் என்று முடிவு செய்கின்றனர். மூவரும் வீட்டிற்குச் சென்று தீவிரமாக தேடியபோது, இறுதியில் மகாவின் கையிலேயே அந்த விஷப் பாட்டில் சிக்குகிறது.

மறுபக்கம் மருத்துவமனையில் திவ்யாவின் உடல்நிலையை நினைத்து அனைவரும் பதற்றத்துடன் காத்திருக்கின்றனர். அப்போது மகா விஷப் பாட்டிலுடன் மருத்துவமனைக்கு வருகிறாள். ஆனால் அதைப் பார்த்த காஞ்சனா, “நீதான் விஷம் கலந்திருக்கிறாய்... இப்போது நாடகம் ஆடி பாட்டிலையும் கொண்டு வந்திருக்கிறாய்” என்று மகா மீது மேலும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறாள்.
இப்படி பரபரப்பான திருப்பங்களுடன் நகரும் இந்தக் கதையில், திவ்யா உயிர் பிழைப்பாரா? விஷம் கலந்ததற்கான உண்மையான காரணம் வெளிச்சத்துக்கு வருமா? மகா தன் மீதான குற்றச்சாட்டிலிருந்து தப்பிப்பாரா? என்பதை அறிய திருமாங்கல்யம் சீரியலை திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு Zee தமிழ் தொலைக்காட்சியில் தவறாமல் காணுங்கள்.